Wednesday, December 26, 2012

மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 3)


     அதேபோல் மதத் தலைவர்களினதும் மதப்போதகர்களினதும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதும், இழிவான கட்டுக்கதைகளைப் பரப்புவதும் சிலருடைய முழுநேரப்பணியாகக் காணப்படுகிறது. அவர்கள் தமது கருத்துக்களைப் பரப்ப அனைத்து வகை வழிமுறைகளையும் அனைத்து ஊடகங்களையும் பரிபூரணமாய்ப் பயன்படுத்துகிறார்கள், இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இக் குறிப்பிட்ட சிலரின் விஷமத்தனமான இக் கருத்துப் பரப்பல்களை முழுமையாய் நம்பும் சாதாரண மக்கள் இனத்துவேசத்தை மனதில் அனுமதிக்கத் துவங்குகின்றனர். பாடசாலை செல்லும் பிஞ்சு மனங்களில் கூட மதப்பிரிவினை  என்ற நஞ்சு விதை நயவஞ்சகர்களால் விதைக்கப்படுகின்றன. மேய்ப்பவன் சொல்வதைக்கேட்க நாம் என்ன ஆட்டு மந்தைகளா? நமக்கென சுய புத்தி கிடையாதா? சொல்லப்படும் கருத்துக்களைச் சரி, பிழை பேதம் பிரித்தறிந்து பார்க்கும் அளவிற்குக் கூட நம் அறிவு இல்லையா? எவனோ எதையோ சொன்னால் அதை அப்படியே நம்புமளவிற்கு நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா?.

     எந்த மதமாய் இருந்தாலும் சரி அதைப்பற்றிப் பேச முதலும், அது பற்றிச் சொல்லப்படும் ஒரு செய்தியை நம்பமுதலும் அம் மதம் சம்பந்தமான அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள முனைவோமேயானால் இது போன்ற வதந்திகளை நம்பி நல்ல உறவுகளை முறித்துகொள்வதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு புதுப்புது விடயங்களைக் கற்றுக்கொள்வதில் உள்ள நம் ஆர்வத்தில் சிறிதளவேனும் நம் சூழலில் வாழ்கின்ற பிற மத சகோதரர்களின் வாழ்வியல் நடைமுறைகள், சமய அனுஸ்டானங்கள், மதக்கொள்கைகள் என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் இருக்குமேயானால் இது போன்ற வரலாற்றுத்தவறுகள் இனிமேலும் நம் சமூகத்தில் நடைபெறாது பாதுகாத்துக்கொள்ளலாம். 

     எல்லா மதங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள இவ் இணைய யுகத்தில் வழிகளா இல்லை, நூற்றுக்கணக்கான தேடுதளங்களில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் காணப்படுகின்றன. யார் உதவியுமின்றி சுயமாகவே தேடிக்கற்றுக்கொள்ள முடியும்.               

இன்றிலிருந்து தயாராவோமே...