Wednesday, December 26, 2012

மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 1)

     இப்போதைய சமூகத்தில் மதங்களைப் பிடித்திருப்பவர்களைவிட 'மதம் பிடித்திருப்பவர்களே' அதிகமாய்க் காணப்படுகின்றனர். அமைதி, சாந்தி, அஹிம்சை போன்றவற்றைப் போதிப்பதாய்ச் சொல்லிக்கொள்பவர்களே நாஸ்திகனை விட அதிகமாய் நாசம் செய்கிறார்கள் அதுவும் மதங்களின் பெயரால்.

      சிலரின் தனிப்பட்ட விரோதங்களும், குரோதங்களும் மதச்சாயம் பூசப்படுகின்றன. அரசியல் விளையாட்டுக்கு மதங்களைக் கொண்டு ஆட்கள் சேர்க்கப்படுகின்றன. எப்படி வாழ வேண்டும் எனப்போதித்த மதங்களைக் கொண்டே மனிதன் தன் வியாபார இலாபத்தை அடையப்பார்க்கிறான். தன் மனிதத்தை எப்போதோ விற்றுவிட்ட மனிதன் மதப் போதனைகளையும் அடமானம் வைத்துவிட்டான் தம் உலக இலாபங்களுக்காக.

     தற்போதைய சூழலில் மதங்களுக்கிடையிலான போட்டியும் பொறாமையும் அளவிட முடிய அளவில் பெருகி மனிதநேய மாண்புகளையே அடியோடு அழித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தம் மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதை விட்டு இதர மதங்களை தாழ்த்துவதற்கே மிகப் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறான். அதுவும் தற்போதைய நவீன காலத்தில் இணைய வெளிகளில் பலரும் பலவிதமாய் வாந்தியெடுப்பதைக் காணக்கூடியதாய் இருக்கிறது.

     கருத்துக்கூறலும் விமர்சித்தலும் விலைபோகாச் சரக்காய் மலிந்துவிட்டது இணைய வெளியில். தலையும் தெரியாமல் வாலும் புரியாமலும் உள்ள விடயங்களுக்கெல்லாம் பண்டிதத் தனமாய்க் கருத்துக் கூறுவதில் குறை சொல்ல முடியா ஒரு கூட்டமே அலைகிறது வெளியில்.

     இணையப் பயங்கரவாதம் என்று சொல்லும் அளவிற்கு மதங்களுக்கு எதிரான மிகக் கீழ்த்தரமான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதங்களையும் குறிவைத்துத் தாக்குவதற்கு பலவகையான கைங்கரியங்கள் பயன்படுத்தப்படுகிறது. கொள்கைரீதியாக, சமூக நடைமுறை ரீதியாக,  பொருளாதார ரீதியாக என மேற்கொள்ளப் பட்டு வந்த தாக்குதல்கள் தற்பொழுது பகிரங்கமாக மத வணக்கஸ்த் தளங்களைத் தாக்குதல், பகிரங்க எதிர்ப்பு ஊர்வலங்களை மேற்கொள்ளல் போன்ற விபரீத வாடிவங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அனைவரும் கவலைப் படவேண்டிய ஒரு விடயமாகும்.

                                                                                                      பகுதி - 2 >>>>