Tuesday, January 1, 2013

உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின் புது வருட நிகழ்வு : ஒரு பார்வை.


      2013.01.01 செவ்வாய்க் கிழமை அரச நிர்வாக உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற புது வருட நிகழ்வு சம்பந்தமான பதிவு இது. நிகழ்விலே நடைபெற்ற சில வேண்டத்தகா அதிகார பிரயோகங்களால் வந்த குறைகளின் பட்டியலே பதியப் படுகிறது. நிகழ்வில் நிறைகளை விடக் குறைகளே அதிகமாகக் காணப்பட்டது. சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு பத்து மணிக்கே ஆரம்பிக்கப் பட்டது. விழாவில் ஆசி கூற வந்த அனைத்து மத குருக்களில் பெளத்த மதகுருக்கள் இருவர் தாமதம் காரணமாக நிகழ்வு ஆரம்பிக்க முதலே சென்று விட்டனர்.

      ஒரு வழியாக நிகழ்வு காலை பத்து மணியளவில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அமைச்சர் கொடியினை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் நெய்விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது, அதன் பின் மும்மொழிகளிலும் உறுதியுரை கூறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வ மத குருக்களால் ஆசியுரைகள் கூறப்பட்டன. முதலில் பெளத்த மதகுருவினால் பிரார்த்தனையும் ஆசியுரையும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவ மத குருவினால் பிரார்த்தனை மற்றும் ஆசியுரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்  மதகுரு, ஆனால் இந்து மதத்தைச் சார்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் மத நிகழ்வுகள் நிறைவு பெற்று அமைச்சின் செயலாளர், அமைச்சர், மேலதிக செயலாளர்கள் மற்றும் சிலரால் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த வேளை நிகழ்வின் இடைப்பொழுதிலே இந்து சமய மதகுரு வருகைதந்தார், அப்பொழுது நேரம் 11.30. எனவே அவரால் உரயாற்றவோ ஆசியுரை கூறவோ முடியாத நிலையேற்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றுவிட்டார். அதன் பின் சிற்றுண்டியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

     இங்கு சில நிகழ்வுகள் சிலரின் அதிகாரப் பிரயோகத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதைக்  காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களினால் சரியான முறையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் படாமையே தாமதத்திற்குக் காரணம். அடுத்து மதகுருக்களுக்கு முன்னமே அறிவுறுத்தல் கொடுத்தல், அவர்களை வாகனங்களை அனுப்பி அழைத்து வரல் என்பனவும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் கடமையாகும்  அவர்கள் தவறியிருப்பது அல்லது வேண்டுமென்றே ஒதுங்கியிருப்பது மிகத்தெளிவாய்த் தெரிகிறது. இந்து சமய மதகுருவிற்கு வாகனம் பதினொரு மணிக்கே அனுப்பப்பட்டுள்ளது, இது இந்து சமய மதகுருவினை வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு இன்னுமோர் காரணம் உரைகள் அனைத்தும் சிங்கள மொழியில் நிகழ்த்தப் பட்ட போதிலும், இஸ்லாம் சமய மதகுரு சிங்கள மொழி தெரியாத ஒருவரை அழைத்து வந்திருந்தனர், அவரால் சிங்களத்தில் உரையாற்ற முடியாமலும், தமிழ் மொழி தெரியாத ஒரு பெருங்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவது அவ்வளவு உசிதம் இல்லை என்பதால் அவர் வாழ்த்து கூறிவிட்டு எதுவுமே உரையாற்றாமல் அமர்ந்து விட்டார்.

     இவ்வளவு காலமும் இல்லாமல் இவ்வருடம் மட்டும் இந்தப் பிரச்சினை ஏற்படக் காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்ததில் முன்பெல்லாம் ஒவ்வொரு சமய மதகுருக்களையும் அழைத்து வரும் பொறுப்பு அவ்வவ் மதங்களைச் சார்ந்த அலுவலகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இவ்வருடம் அனைத்து சமய மதகுருக்களையும் அழைத்து வரும் பொறுப்பை ஒரு உயர் அலுவலகர் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து ஒரு சிங்கள அலுவலகருக்குப் பெற்றுக்கொடுத்தமையும், அவ் அலுவலகர் வேண்டுமென்றே பிறமதங்களைப் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இது பல்லின மதத்தினர் கடமை புரியும் இவ் அமைச்சில் மத ரீதியிலான பிளவுகளை வேண்டுமென்றே தூண்டுவதாக அமைகிறது, எனவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதனைக் கருத்திற் கொண்டு வருங்காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாதிருக்க ஆவன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment