Thursday, January 3, 2013

மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.

தலைப்பு சம்பந்தமான என் கருத்துப் பதிவு.

பகுதி - 03

     சரி, எமது சமய அடிப்படையில் ஆண், பெண் கலப்பு தவறென்ற அடிப்படையில் பாடசாலைகள் தனிப்பால் பாடசாலைகளாகப் பிரிக்கப்படவே வேண்டும் என எடுத்துக்கொள்வோம், எந்த அடிப்படையில் பிரித்தல்?, எந்தெந்தப் பாடசாலைகளைப் பிரித்தல்? என்பதில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. எமதூரில் காணப்படுகின்ற சிரேஸ்ட பாடசாலைகளை மட்டுமே பிரித்தல் வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றன.

     இதில் உள்ளகப் பிரிப்பு என்பது ஒரு முறையாகும், அதாவது ஒவ்வொரு பாடசாலைகளையும் ஆண், பெண் எனத் தனித்தனியே இரு பிருவுகளாக்கி ஒரே பாடசாலைப் பெயரின் கீழ் ஆண் பிரிவு, பெண் பிரிவு எனப்பிரித்தல். மேற்கூறிய இவ் உள்ளகப் பிரிப்பிலே பல நன்மைகள் காணப்படுகின்றன. அதாவது பாடாசலைகள் அதே நாமங்களில்க் காணப்படும், விரும்பிய மாணவர்கள் விரும்பிய பாடசாலைகளில் கல்வி கற்க முடியும், பாடசாலைகளுக்கிடையில் கல்வி, மற்றும் விளையாட்டுப் போன்றவற்றில் ஆரோக்கியமான போட்டி காணப்படும், மாணவர்களின் பல அசெளகரியங்கள் அதாவது அதிக தூரம், போக்குவரத்துச் சிரமம் போன்றவை தவிர்க்கப்படல் போன்ற நன்மைகளைக் கூறலாம்.

     இப்பிரித்தல் முறைமையில் சில குறைபாடுகளும் காணப்படத்தான் செய்கின்றன. அதாவது ஒரே பாடசாலை இரு பிரிவுகளாகப் படும் போது பாரிய இடப்பிரச்சினை மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். ஆனால் உரிய அதிகாரிகளின் உதவியுடன் இக்குறைகள் தீர்க்கப்பட்டு ஆண், பெண் இரு பிரிவுகளுக்கு சமமான, நிறைவான வளங்களை வளங்கக்கூடியதாய் இருக்குமெனில் இப்பிரிப்பு முறை ஒரு சிறந்த பிரித்தல் முறையாகக் காணப்படுகிறது.

     அடுத்த பிரிப்பு முறையானது முற்றிலும் வேறான பிரிப்பு. அதாவது எமது ஊரில் காணப்படுகின்ற பிரபல்யப் பாடசாலைகள் இரண்டையும் ஒன்றை ஆண் பாடசாலையாகவும், மற்றயதை பெண் பாடசாலையாகவும் பிரித்தல். இது ஒரு முறை மற்றையமுறை பிரதான வீதியை அண்மித்துக் காணப்படுகின்ற பாடசாலைகளான அல் -மனார் மத்திய கல்லூரி, சம்ஸ் மத்திய கல்லூரி இரண்டையும் ஆண்கள் பாடசாலையாகவும், ஊருக்கு மத்தியில் காணப்படுகின்ற பாடசாலைகளான அல்-ஹம்றா மஹா வித்தியாலயம், புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயம் இரண்டையும் பெண்கள் பாடசாலையாகவும் பிரிக்கின்ற முறைகள்.

      இந்த முற்றிலும் வேறான பிரிப்பினை எடுத்துக் கொள்வோமேயெனில், இதில் காணப்படுகின்ற நன்மைகளாவன, பிரிக்கப்படுகின்ற ஆண், பெண் இருபாடசாலைகளுக்கும் போதுமான அளவு இட வசதி, மற்றய வசதிகளும் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் இப்பிரித்தல் முறைமையில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

     அதாவது பிரபல்யப் பாடசாலைகள் இரண்டையும் ஆண், பெண் பாடசாலைகள் என இரண்டாகப் பிரிக்கும் போது எமது கிராமத்தின் கரையோரத்தில் வசிக்கின்ற மாணவர்களுக்கு அதிலும் பெண் மாணவிகளுக்கு பெரிய போக்குவரத்துப் பிரச்சினையைக் கொண்டுவரும். பெரிய நீலாவணைக் கரையோரத்தைச் சேர்ந்த மாணவி ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கு நடந்து வருவதென்பது மிகுந்த சிரமமான விடயம், பாடசாலை செல்ல ஒவ்வொரு நாளும் தந்தையையோ, சகோதரர்களையோ எதிர்பார்த்திருக்கவும் முடியாது. ஆனால் அல்-மானார் கல்லூரியை ஆண் பாடசாலையாக மாற்றும் அதே வேளை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தை பெண் பாடசாலையாகவும், ஸம்ஸ் கல்லூரியை பெண் பாடசாலையாக மாற்றும் அதேவேளை அல்-ஹம்றா வித்தியாலயத்தை ஆண் பாடசாலையாகவும் மாற்றுவதினால், இந்த அதிக தூரம் போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம்.

     இதில் கூறப்பட்டிருக்கின்ற இரண்டாவது பிரிப்பு முறையான பிரதான வீதியை அண்மித்த அல்-மானார், ஸம்ஸ் இரு பாடசாலைகளையும் ஆண் பாடசாலைகளாகவும், சரிபுதீன் வித்தியாலயம், அல்-ஹம்றா வித்தியாலயம் இரண்டையும் பெண் பாடசாலைகளாகவும் மாற்றும் முறை இதில் போக்குவரத்து, அதிக தூரம் போன்ற பிரச்சினைகள் எதுவும் காணப்படாது.

     இருந்தாலும் ஆண் பாடசாலைகளுக்குக் கிடைக்கின்றளவு பெளதிக வளங்கள் பெண் பாடசாலைகளுக்குக் கிடைக்காதென்றொரு குறை காணப்படுகின்றது. முற்றாகப் பிரிக்கின்ற இவ் இரண்டு முறைகளிலும் காணப்படுகின்ற மிகப் பெரிய குறை பாடசலைகளுக்கிடையான கற்றலில் உள்ள ஆரோக்கியமான போட்டி இல்லாது போகும் என்பதாகும்.

     தென் தெரு, வட தெருப் போட்டி காணப்பட்ட காலம் முதல் இன்றுவரை அல்-மானார், ஸம்ஸ்  இருகல்லூரிகளுக்கும் இடையே கற்றலில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுகின்றமை எல்லோரும் அறிந்ததே, இப்போட்டியானது இப்பிரித்தல் முறைமையால் அற்றுப்போகும் என்பதே மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். ஆண், பெண் போட்டி தோன்றலாம் என எதிர்பார்த்தாலும் இருப்பதை இழந்துவிட்டு புதிதாகத் தோன்றும் என்பதை நம்பியிருக்கவும் முடியாது, அதுவுமில்லாமல் பாடசாலை உள்ளக மட்டத்தில் கூட இதுவரை ஆண், பெண் மாணவர்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டி இருந்ததில்லை என்பதைக் கூறிக்கொள்ள வேண்டும். எனவே எம்மிடம் இருக்கின்ற கற்றலின் ஆரோக்கியமான போட்டியை நாம் ஒருக்காலும் இழந்துவிடக்கூடாது.

     இங்கே கூறப்பட்டவைகள் அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே. பாடசாலைப் பிரித்தல் சம்பந்தமாய் முயல்பவர்கள் என்னைவிட அறிவு ஜீவுகளும், புத்திசாலிகளும் என்பதை நானறிவேன். எனவே எமது மாணவர் சமூகத்திற்கும், எமதூரின் கல்விக்கும் எந்தவகையிலும் பாதிப்புக்கள் வராதவகையில் முடிவெடுப்பார்கள் என்பதை பூரணமாய் நம்பி சிறந்த முடிவிற்காய்க் காத்திருக்கிறேன்.

1 comment: