Thursday, January 3, 2013

மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.

தலைப்பு சம்பந்தமான என் கருத்துப் பதிவு.

பகுதி - 02

     சரி, நாம் மாணவர்களின் பாடசாலை நேரம் தவிர்ந்த பெற்றோர்களுடன் கழிக்கும் நேரங்களைப் பார்ப்போம், எனது பாடசாலை ஆரம்பப் பருவ வயதில் மஹரிபுடைய தொழுகையைத் தொடர்ந்து இஷாவுடைய அதான் வரை ஒவ்வொரு வீடுகளிலும் அல் குர்ஆன் ஓதும் நாதம் வீதிகள் வரை ஒலிக்கும், ஆனால் இப்போதைய நிலை என்ன? ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களின் சத்தம் அதானின் சத்தத்தையே மிஞ்சுமளவு சத்தமாய் வீதி வரை கேட்கிறது. இந்தத் தொடர் நாடகங்களில் என்னதான் காட்டப்படுகிறது, காதலும், போதைப் பாவனைகளும், வன்கருத்துக்களும், கள்ளவுறவுகளுமே காட்டப்படுகின்றன, இதனை தாய்,மகன், தந்தை,மகள் பேதங்களின்றி எந்தவிதக் கூச்சங்களுமின்றி வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பின் அந்நாடகக் கதைகளே பகற்பொழுதனைத்தும் அவர்களின் பேசு பொருளாகக் காணப்படுகிறது, திரைப்படங்கள் பலவும் ஒட்டுமொத்தக் குடும்பத்தினதும் முக்கிய போழுதுபோக்கம்சமாய்க் காணப்படுகிறது. தம் வீடுகளில் எந்நேரமும் பார்க்கின்ற, கேட்கின்ற விடயங்களில் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் அவற்றில் அனுபவம் தேட முனைகின்றனர். அதற்கவர்களுக்கு இளவயதிலேயே பெற்றோரால் வாங்கிக்கொடுக்கப்பட்ட கைத்தொலைபேசியும், கவனிக்க யாருமற்ற தனிறையில் கொடுக்கப்பட்ட இணைய இணைப்புக் கொண்ட கணனிகளும் பெரிதும் உதவுகின்றன.

     தாம் விரும்புகின்ற இந்தக் கீழ்த்தரமான விடையங்களில் அனுபவங்களை பாடசாலையில், பகுதி நேர வகுப்புக்களிலும், ஏன் சொந்த வீடுகளிலும் ஏற்படுத்திக்கொள்ள முனைகின்றனர் என்ற உண்மையை நாம் மிக வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். தவறு நடந்தபின் குய்யோ முறையோ என ஓலமிடும் பெற்றோர் தம் மகன் கணனியில் என்ன பார்க்கிறான்?, இணையத்தில் என்னென்ன இணையத் தளங்களில் உலவுகிறான்?, தம் மகள் இரவுமுழுதும் கைத்தொலைபேசியில் யாருடன் குசு குசுக்கிறாள்?, இருபத்துநான்கு மணிநேரமும் வரும் குறுஞ்செய்திகள் (SMS) யாரிடமிருந்து வருகின்றன? என்பவற்றைக் கவனியாது தம் பிள்ளைகளைப் போகின்ற போக்கில் விட்டது எல்லாம் மகா தவறில்லையா?

     இன்னுமோர் வர்க்கப் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மட்டும் பார்க்கின்றனரே தவிர ஆன்மீக, சமய ஒழுக்க விருத்தியை இச்சளவும் கவனத்தில் கொள்வதில்லை. இதனால் சில மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் மட்டும் போதும் மற்றப்படி என்ன செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் பிரச்சினை இல்லை எண்ணத்தில் நடந்து கொள்கின்றனர். இதனை சில பெற்றோர் ஆதரவாயிருப்பதும் மிகக் கொடுமை. இதனாலும் மாணவர்கள் தவறிழைக்க அச்சப்படா நிலை தோன்றியுள்ளது. நமது ஊரைப் பொறுத்தமட்டில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்களும், மாணவர் அமைப்புக்களும் இருக்கின்றன. அவை மாணவர்களைக் குறிக்கோளாய்க் கொண்டு எத்தனையோ அறிவுசார், மத ஒழுக்க விழுமியங்கள் சார்ந்த பயிற்சி வகுப்புக்களையும் நடத்துகின்றன, ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாணவர்கள் மட்டுமே இவற்றில் கலந்துகொள்கின்றனர். இவ்வாறான வகுப்புக்களுக்குச் செல்வதால் படிப்புப் பாழாய்ப்போகும் என சில பெற்றோரே மாணவர்களைத் தடுப்பது மிகவும் வருந்தக்கூடிய விடயமாகும்.

     இவ்வளவு அடிப்படைப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பாடசாலையை ஆண், பெண் பிரித்துவிட்டால் மாணவர்களின் எல்லாத்தவறுகளையும் ஒளித்து விடலாம் என நினைப்பது பகற்கனவில்லையா? பாடசாலையைப் பிரித்துவிட்டால் மாத்திரம் மாணவர்கள் முற்றுமுழுதாய்த் திருந்திவிடுவார்களா? பாடசாலைகள் பிரிந்திருந்தாலும், சேர்ந்திருந்தாலும் ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன், வாழக் கற்பிக்க நாம் முனையத்தேவை இல்லையா? பல்லாயிரம் கட்டுப்பாடுகள் நிறைந்த பாடசாலையில் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரித்து வைத்திருந்தால் பின்னர் நாம் எதிர்நோக்கும் பூதாகரப் பிரச்சனை என்னதெரியுமா? உயர் தரப் பரீட்சையின் பின் பல்கலைக்கழக நுழைவு, தனிப்பட்ட இடத்தில் பலகட்டுப்பாடுகளுடன் அடைக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகமெனும் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்ற ஒரு கலப்புச் சமூகத்திற்குள் நுழையும் போது, 'காய்ந்த மாடு கம்பன் கொல்லைக்குள் பாய்வதால்' ஏற்படும் விளைவுகள் ஏற்படாதா? இவ்வாறானதொரு நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டாமா? எனவே எந்தச் சூழலிலும் கட்டுப்பாடாகவும், ஒழுக்கத்துடனும் வாழ அவர்களைத் தயார் படுத்த வேண்டுமே, எனவே இதற்கமைய எம் மாணவர் சமூகத்தைப் பயிற்றுவிக்க ஆசிரியர், பெற்றோர், புத்தி ஜீவிகள் எந்தவகையில் முனையப்போகிறோம்.

                                                                                          பகுதி - 03 >>>>

No comments:

Post a Comment